Wednesday 4 May 2011

மனிதா நீ மகத்தானவன் - மண்ணில் பரம் பொருளின் உருவானவன்

மனிதா நீ மகத்தானவன் - மண்ணில் 
பரம் பொருளின் உருவானவன்
பாரதத் தாய் இளைய மகன்
பண்பாட்டில் மூத்த மகன்
வரலாற்றை உருவாக்கும் தலை மகன் நீ
                                        (மனிதா நீ மகத்தானவன்...)

மனம் வைத்தால் மலைகளும் உன் கைகளுக்குள் தூளாகும்
கனப் பொழுதில் நதிகளுமே திசை மாறிப் பாய்ந்து வரும்  
மனம் வைத்தால் மண்ணிதனில் அம்ருதமும் திரண்டு வரும்
வானம் இங்கு பூமியுடன் விளையாட்டாய் ஒன்றிணையும்
அழிவற்றவன் நீ.....
அழிவற்றவன் நீ - உந்தன் உயிரினிலே நின்றுலவும்
பரம் பொருளின் மகத்துவத்தை உணர்ந்திடுவாயே
                                        (மனிதா நீ மகத்தானவன்...)

கண்களிலே கனலிருக்கும் அசைவினிலே புயலிருக்கும்
பொங்கிவரும் சினம் கண்டு காலனிங்கு ஓடிவிடும்
மண்ணும் செந்நிறமாகும் மாமலையும் தாழ்ந்துவிடும்
சீற்றத்தின் உச்சியிலே தாண்டவம் நடம் புரியும்  
உண்மையிலே நீ....
உண்மையிலே நீ பெரும் சக்திகளின் முழு உரு நீ
குரல் கொடுத்து புது யுகத்தை அழைத்திடுவாயே
                                        (மனிதா நீ மகத்தானவன்...)

அண்டத்தில் வீரமகன் அக்னியைப் போல் பெருந்தீரன்
கட்டளைக்கு அடிபணிந்து காலம் கூட நின்று விடும்
உறுதி கொண்டு உழைத்தாலே சாதிப்பாய் எதையும் நீ
துணிவு கொண்ட உள்ளத்துடன் சிங்கமென எழுவாய் நீ
முயன்றாலே நீ....
முயன்றாலே நீ உந்தன் முயற்சிஎனும் பெரும்பலத்தால்
மண்ணுலகை விண்ணுலகாய் மாற்றிடுவாயே
                                        (மனிதா நீ மகத்தானவன்...)
 

Tuesday 3 May 2011

தேவலோகமே வியக்கும் எம் அருமைத் தாயகம்



தேவலோகமே வியக்கும் எம் அருமைத் தாயகம்
ஆதி அந்தம் அற்றதிந்த அமரபூமி பாரதம்

கிரேக்க ஹூண  யவனர்கள் புயலைப் போலத் தாக்கினர்
பஞ்ச நதிக் கரை தனில் தோல்வி கண்டு சாய்ந்தனர்
பஞ்சு போல் பறந்தனர் காற்றிலே கலந்தனர்
கால வெள்ளப் போக்கிலே கடலுடன் கரைந்தனர்
பாரந்தத்தின் வீர சக்தி பாரிலே ஜொலித்தது
பாரிலே ஜொலித்தது ...
                                           ( தேவலோகமே வியக்கும் )

பாரதத்தின் மண்ணில் எங்கும் சுயநலம் படர்ந்தது
பராக்கிரமம் வளர்த்திடும் மரபுகள் தகர்ந்தன
போக வசதி ஆசையில் மூழ்கி வாழ்ந்த வேளையில்
துரோகிகள் மலிந்தனர் சுதந்திரம் அழிந்தது
தேசபக்த ஜோதியேற்றி புத்துணர் வெழுப்புவோம்
புத்துணர் வெழுப்புவோம் ....
                                           ( தேவலோகமே வியக்கும் )

உணவு உடைகள் ஜாதிகள் வழிபாட்டில் வேற்றுமை
உள்ளத்திலே கோவில் கொண்ட தர்மத்திலே ஒற்றுமை
முந்தையரின் உதிரம் நம்மை ஒரு குடும்பம் ஆக்குது
ஒருமையை உடைக்க வரும் மடமையை அகற்றுவோம்
ஒன்றுபட்ட பாரதத்தின் எழுச்சி கீதமே இது
எழுச்சி கீதமே இது ....
                                           ( தேவலோகமே வியக்கும் )

அதர்ம சக்தி ஓங்கி எங்கும் தலை விரித்து ஆடுது
அன்னியர் வலை விரித்து வேட்டையும் நடக்குது
அன்னை அலறி அழும் குரல் நெஞ்சையே உருக்குது
ராஷ்ட்ர பக்தி நறுமணம் நாட்டிலே நிரப்புவோம்
நாட்டினை எழுப்புவோம் இன்றைய பணி இது
இன்றைய பணி இது ....
                                           ( தேவலோகமே வியக்கும் )